Banner Wishes

செய்திகள்

Wednesday, January 23, 2013

சார்ட்டர்டு அக்கௌன்டன்ட் (C.A) இறுதி தேர்வில் தமிழ் மாணவி முதலிடமெடுத்து சாதனை


மும்பையில் வாழும்  தமிழ் மாணவி பிரேமா ஜெயகுமார் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை (விழுப்புரம் மாவட்டம்) சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள் பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் (மலாட் பகுதியில்) வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.


மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

இதுகுறித்து, பிரேமா கூறியதாவது:
என் வெற்றியை பெற்றோரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லை என்றால், என்னால், இச்சாதனையை பெற்று இருக்க முடியாது. வறுமையான சூழலிலும், எங்களை படிக்க வைக்க வேண்டும், என்று பல தியாகங்களை செய்தனர்.ஒன்று முதல், 7ம் வகுப்பு வரை, மலாடு நகராட்சி பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆங்கில பாடத்தை தவிர்த்து, மற்ற அனைத்து பாடங்களையும், தமிழில் தான் கற்றேன்.

அதன்பின், மலாடு செகன்டரி பள்ளியில், 8 முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களை, ஆங்கில மீடியத்தில் படித்தேன். என்.எல்., காலேஜில், பிளஸ் 2 முடித்து, நாகின்தாஸ் கண்டவாலி கல்லூரியில், பி.காம்., முடித்தேன். அதன்பின் மும்பை பல்கலையில் எம்.காம்., பட்டம் பெற்றேன்.எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தபோது, அக்கவுன்டன்ட் படிப்பில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற, என் விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அதை மறுக்காமல், அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

என் சகோதரன் தன்ராஜும், பி.காம்., முடித்து, சி.ஏ., தேர்வை எழுத விரும்பியதால், இருவரும் சேர்ந்தே படித்தோம். மலாட் பகுதியில் வாடகை குடியிருப்பில் உள்ள எங்கள் வீடு சிறியது. அதில் நாங்கள் இருவரும், இரவில் கண் விழித்து படிக்க தேவையான வசதிகளை, என் தாய் ஏற்படுத்தி தந்தார். "டிவி' இணைப்பை துண்டித்து, படிப்பிற்கு உதவி செய்தனர். எங்களின் முயற்சிக்கு ஆசிரியர்களும் பல உதவிகளை செய்தனர். சி.ஏ., படிப்பில் இந்திய அளவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் எனக்குள் இருந்தது. இதில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றது, என் பெற்றோரின் தியாகத்திற்கும், என் விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். என் சகோதரன் தன்ராஜூம் சி.ஏ., படிப்பில் தேர்ச்சியடைந்தது, இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது 

.மிகுந்த ஏழ்மையான நிலையில், மும்பைக்கு பிழைப்பு தேடி வந்தபோது, ஆதரவு அளித்த என் தாய்மாமன்கள் குப்புசாமி, பெருமாள் இவர்களின் உதவியை மறக்க முடியாது.தமிழ் மீடியத்தில் படித்த நான், சி.ஏ., படிப்பில் சாதனை படைத்ததை பெருமையாக கருதுகிறேன். தாய் மொழியான தமிழும், சொந்த ஊரும் என் அடையாளங்கள் என்பதை மறக்க மாட்டேன். சூழ்நிலை எப்படி இருந்தாலும், சரியான வகையில் முயன்றால் வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன்.நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, விரைவில் என் தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். படிக்க ஆர்வம் இருந்தும், பணமின்றி கஷ்டப்படும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உதவி செய்ய விரும்புகிறேன். சி.ஏ., படிப்பில் சாதிப்பதற்கான முறைகளை, இப்படிப்பை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு கூறி, வழிகாட்ட தயாராக இருக்கிறேன்.இவ்வாறு, சாதனையாளர் பிரேமா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பிரேமா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 79 சதவீதம் மதிப்பெண் எடுத்தார். பிளஸ் 2 தேர்வில், 80 சதவீதமும், பி.காம்., படிப்பில், 90 சதவீதமும், எம்.காம்., படிப்பில், 80 சதவீதமும் மதிப்பெண் எடுத்து, தொடர்ந்து படிப்பில் சிறந்து விளங்கி வந்துள்ளார். விடாமுயற்சியுடன் படித்ததால் மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் , சி.ஏ., படிப்பிலும், 75.87 சதவீதம் எடுத்து சாதித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா. என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவி பிரேமாவுக்கு  ரூ. 10 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



- நன்றி தினமலர்

1 comment:

  1. சகோதரி உன்னால் தமிழ் பெருமையடைகின்றது. வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர.

    ReplyDelete