Banner Wishes

செய்திகள்

Sunday, January 6, 2013

சென்னையில் நடிகர், நடிகைகள் நாளை உண்ணாவிரதம்


சென்னை: சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். இதில், ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைககள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி, அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் தொலைக்காட்சி துறை தொழிலாளர்களுக்கும் 12.3 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டது. 

இது கடந்த ஜூலை 1,ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருநாள் போராட்டம் அறிவித்து, தியேட்டர்களை மூடினர். படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சேவை வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு திரையுலகினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னையில் நடிகர், நடிகைகள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நாளை நடக்கிறது. இதில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கின்றனர். 

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறியதாவது: திரையுலக கலைஞர்கள் ஏற்கனவே வருமான வரி கட்டி வருகின்றனர். இந்நிலையில், சேவை வரி விதிப்பது அவர்களுக்கு சுமையாக இருக்கும். இந்த சுமையை தயாரிப்பாளர்கள் மீதுதான் அவர்கள் சுமத்துவர். இதனால் தயாரிப்பு செலவு அதிகரித்து திரையுலகம் கடுமையாக பாதிக்கும். எனவே, சேவை வரியில் இருந்து திரையுலகம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் திரைப்பட நடிகர் நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், வினியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர். 

இதையொட்டி தமிழகம் முழுவதும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள், அது தொடர்பான எந்த பணிகளும் நடக்காது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தியேட்டர்களில் படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சரத்குமார் கூறினார். சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே நாளை நடக்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் கமிஷனர் நேற்று அனுமதி அளித்தார். போராட்டம் நடக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து அடுத்தகட்டமாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தமிழ் திரையுலகினர் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment